

வேலூர்
நாடு முழுவதும் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் மூலமாக தூய்மை மற்றும் வெளிப்படையான நிர்வாகத்துடன் செயல்படும் அரசு மருத்துவமனை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆண்டுதோறும் காயகல்ப் விருதுடன் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2020-21-ம் நிதியாண்டில் சிறப்பாக செயல்படும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழக அளவில் சிறப்பான பராமரிப்புக்காக வேலூர் கஸ்பா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காயகல்ப் விருதுடன் ரூ.2 லட்சம் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 படுக்கை வசதிகள் கொண்டது. ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர்கள், மருந்தாளுனர், உதவியாளர்கள் என 15 பேருடன் இயங்கி வருகிறது.
தினசரி 200-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். தினசரி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொது மருத்துவ பரிசோதனையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு பிரிவு மருத்துவர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மாதத்துக்கு 20 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெறுவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.