

தேனி:
வேலை நிறுத்தம்
தமிழகம் முழுவதும் போர்வெல் உரிமையாளர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கினர். போர்வெல் பணிகளுக்கான டீசல், ஆயில் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வை கண்டித்தும், போர்வெல் பணிக்கான விலையை உயர்த்தக் கோரியும் இந்த வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.
அதன்படி தேனி மாவட்டத்தில் போர்வெல் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். போர்வெல் வாகனங்களை தேனி கலெக்டர் அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்தனர்.
500 தொழிலாளர்கள்
இதுகுறித்து தேனி மாவட்ட ரிக் உரிமையாளர் சங்க தலைவர் குருசாமி கூறுகையில், "டீசல், ஆயில், உதிரிபாகங்கள் விலை உயர்வால் எங்களின் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 1 லிட்டர் டீசல் விலை ரூ.50 ஆக இருந்தபோது ஒரு அடி போர்வெல் அமைக்க ரூ.65 கட்டணம் வசூலித்தோம். இப்போது டீசல் விலை ரூ.100-ஐ தொட்டுள்ள நிலையில் ஒரு அடிக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கிறோம். இது கட்டுப்படியாகாது. இதனால் தொழில் நலிவடைந்து வருகிறது. அதனால் வேலை நிறுத்த போராட்டம் நடத்த தள்ளப்பட்டுள்ளோம். மாவட்டத்தில் உள்ள 40 போர்வெல் வாகனங்களும் இயங்கவில்லை. சுமார் 500 தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்" என்றார்.