கர்ப்பிணியை எரித்து கொன்ற வழக்கு: கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை - கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

கல்லாவி அருகே கர்ப்பிணியை எரித்து கொன்ற வழக்கில் கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கர்ப்பிணியை எரித்து கொன்ற வழக்கு: கணவர் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை - கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள கல்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் பாஷா என்கிற பாதுஷா(வயது 37). பேக்கரி தொழிலாளி. இவருக்கும் சிங்காரப்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்த அன்வர் மகள் ரஷீயா(26) என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்தநிலையில் பாஷாவிற்கும், பெங்களூரு எம்.எஸ்.பாளையம் பகுதியை சேர்ந்த அவரது உறவினரான அசினா(24) என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அசினாவை பெங்களூருவில் இருந்து தனது ஊரான கல்குண்டுக்கு அழைத்து வந்துள்ளார். இது தொடர்பாக பாஷாவிற்கும், ரஷீயாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 25-ந் தேதி பாஷாவும், அசினாவும் தகாத உறவில் இருந்த போது, ரஷீயா நேரில் பார்த்து கூச்சலிட்டு, தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஷா, அவருடைய தந்தை பஷீர்சாய்பு(72), தாய் அபினாபீ(65) மற்றும் அசினா ஆகியோர் சேர்ந்து ரஷீயாவை தாக்கியதுடன், மண்எண்ணெயை அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளனர்.

அப்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்த ரஷீயா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தந்தை அன்வர் கொடுத்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஷா உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அந்த தீர்ப்பில், ரஷீயாவை எரித்து கொலை செய்த குற்றத்திற்காக பாஷா உள்ளிட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com