சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: ரங்கசாமியின் முயற்சி வெற்றிபெறுமா?

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு கடிதம் கொடுத்துள்ள எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியின் முயற்சி வெற்றிபெறுமா? என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: ரங்கசாமியின் முயற்சி வெற்றிபெறுமா?
Published on

புதுச்சேரி,

புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அபார வெற்றிபெற்ற நிலையில் முதல்கட்டமாக கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி அரசு வீழ்த்தப்பட்டு பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்துள்ளது.

இதேபோன்ற நடவடிக்கை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தொடரும் என்று அப்போதே எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு முன்னதாகவே புதுவையில் ஆட்சியை கவிழ்த்து என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு வலைவீசப்பட்டது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான விஜயவேணி, தீப்பாய்ந்தான் ஆகியோரை தொடர்பு கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் ஆகியோர் தங்கள் அணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக விஜயவேணியும், தீப்பாய்ந்தானும் அப்போதைய சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் புகார் கொடுத்தனர். அந்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் உள்ளது.

இந்தநிலையில் மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் எதிர்க்கட்சி தலைவரான ரங்கசாமியே நேரடியாக களம் இறங்கி இருப்பதாக தெரிகிறது. இதற்கு பாரதீய ஜனதா கட்சி மேலிடமும் பச்சைக் கொடி காட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் முதல்கட்டமாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தீர்மானத்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக சட்டசபை கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர்தான் முடிவு செய்வார். அந்த கூட்டத்தில் ரங்கசாமி தனது தீர்மானத்தை வலியுறுத்த வேண்டும். இந்த தீர்மானத்தை எடுத்துக்கொள்ள 5-ல் ஒரு பங்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் என்.ஆர்.காங்கிரஸ் வசமே உள்ளனர்.

இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டால் இதுதொடர்பான விவகாரத்தை துணை சபாநாயகர்தான் கவனிக்கவேண்டும். தீர்மானத்தை விவாதத்துக்கு விட்டு அதன்பின் வாக்கெடுப்பு நடைபெறும்.

ஏற்கனவே துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்துதான் தற்போது சபாநாயகராகி உள்ளார். துணை சபாநாயகர் பதவியிடம் தற்போது காலியாகவே உள்ளது. எனவே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நேரங்களில் சபையை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான லட்சுமிநாராயணன், அனந்தராமன், தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோர்தான் இந்த விவகாரத்தையும் நடத்த வேண்டும்.

தற்போது ஆளுங்கட்சி வரிசையில் சபாநாயகருடன் சேர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும், எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும் உள்ளனர். ஒரு இடம் காலியாக உள்ளது. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை கிடையாது என்று சபாநாயகராக வைத்திலிங்கம் இருந்தபோது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நியமன எம்.எல்.ஏ.க்களான பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க இந்த சபையை நடத்துபவர்கள் அனுமதிப்பார்களா? என்பது சந்தேகமே. எனவே ஆளுங்கட்சி தரப்பில் இருந்து அதிக அளவில் எம்.எல்.ஏ.க்களை இழுக்கவேண்டிய கட்டாய நிலை ஏற்படும்.

ஏற்கனவே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் அணிக்கு வருமாறு பேசிய என்.எஸ்.ஜே.ஜெயபால், வையாபுரி மணிகண்டன் ஆகியோரின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க ஆளுங்கட்சி தரப்பில் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வரும் நிலையில்தான் இந்த நம்பிக்கையில்லா தீர்மான விவகாரம் வந்துள்ளது.

ரங்கசாமி கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறாவிட்டால் ஏற்கனவே புகாருக்கு ஆளாகியுள்ள என்.எஸ்.ஜே.ஜெயபால், வையாபுரி மணிகண்டன் ஆகியோரது பதவியை பறிக்கும் நடவடிக்கையை ஆளுங்கட்சி எடுக்கும் என்று தெரிகிறது. எனவே சட்டசபை தொடங்கிய பின்னர்தான் இந்த தீர்மானத்தை ரங்கசாமி மீண்டும் வலியுறுத்துவாரா? என்பது தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com