கவனிக்க யாரும் இல்லாததால் விரக்தி: ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி முதியோர் இல்லத்தில் ஒப்படைப்பு

கவனிக்க யாரும் இல்லாததால் விரக்தியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி மீட்கப்பட்டு, முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
கவனிக்க யாரும் இல்லாததால் விரக்தி: ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி முதியோர் இல்லத்தில் ஒப்படைப்பு
Published on

திரு.வி.க.நகர்,

சென்னை பெரவள்ளூர் லோகோ சாலையில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர் கஜலட்சுமி (வயது 70). இவருடைய கணவர், 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குழந்தைகளும் இல்லாத நிலையில் மூதாட்டி கஜலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

வீட்டு வேலைகள் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்தார். ஆனால் வயது முதிர்வு மற்றும் உடல் நிலை பாதிப்பு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இதனால் சாப்பிடவும், மருத்துவ செலவுக்கும் பணம் இன்றி தவித்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ள தன்னை உடன் இருந்து கவனிக்க யாரும் இல்லையே? என மிகுந்த மனவேதனையில் காணப்பட்டார்.

இதனால் விரக்தி அடைந்த மூதாட்டி கஜலட்சுமி, நேற்று காலை லோகோ ரெயில் நிலையம் அருகே ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள், அவரை காப்பாற்றினர்.

பெரவள்ளூர் போலீசார், ஏற்கனவே அனாதையாக சுற்றித்திரிந்த 7 பேரை மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்து உள்ளனர். இதை அறிந்த பொதுமக்கள், பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு, சம்பவ இடத்துக்கு சென்று மூதாட்டி கஜலட்சுமியை பெரவள்ளூர் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று ஆறுதல் கூறினார். அவருக்கு சாப்பிட உணவு, புது சேலை வாங்கி கொடுத்தார். முதலுதவி சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தார்.

பின்னர் மூதாட்டி கஜலட்சுமியை, அயனாவரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தார். அவருக்கு மூதாட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com