

பேட்டை:
நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த கீழக்கல்லூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சூர்யநாராயணன் (வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பணிகரிசல்குளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று அதிகாலை வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தார்.
கொண்டாநகரம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது நெல்லையில் இருந்து களக்காடுக்கு லோடு ஏற்றி வந்த லோடு ஆட்டோ சூர்யநாராயணன் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சூர்யநாராயணனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு சய்து, லோடு ஆட்டோ டிரைவரான மானூர் பொட்டல் பகுதியைச் சேர்ந்த ஜோயல் செல்வராஜ் (45) என்பவரை கைது செய்தனர்.