சேலத்தில் பூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

சேலம் கடைவீதியில் பொங்கல் பண்டிக்கைக்கு தேவையான பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
சேலத்தில் பூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
Published on

சேலம்,

பூஜை பொருட்கள்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூஜை பொருட்களை வாங்க சேலம் கடைவீதியில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர். அவர்கள் பொங்கல் வைக்க மண்பானை மற்றும் தேங்காய், பழம், மஞ்சள் குலை, கரும்பு உள்ளிட்ட பூஜை பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும் அங்கிருந்த துணிகடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதேபோல் சேலம் சின்ன கடைவீதி, அக்ரஹாரம், செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட், அன்னதானப்பட்டி, குகை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அழகாபுரம், குரங்குச்சாவடி உள்ளிட்ட பல பகுதிகளில் கரும்பு, வாழைப்பழம், மஞ்சள் குலை, காப்புக்கட்டு பூக்களை ஏராளமானவர்கள் வாங்கி சென்றதால் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. குறிப்பாக உழவர் சந்தைகள், காய்கறி மார்க்கெட்டுகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. மாநகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் குற்றச்சம்பவம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பூக்கள் விலை உயர்வு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று குண்டுமல்லி கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கனகாம்பரம் கிலோ ரூ.1,600-க்கும், சன்னமல்லி, காக்கட்டான், கலர் காக்கட்டான் ஆகியவை தலா ரூ.1,000-க்கும், அரளி, வெள்ளை அரளி, மஞ்சள் அரளி ஆகியவை தலா ரூ.240-க்கும் விற்பனையானது.

ரூ.1 கோடிக்கு காய்கறி விற்பனை

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளுக்கும் நேற்று 1,108 விவசாயிகள் 304 டன் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 9 லட்சத்து 20 ஆயிரத்து 484-க்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. 66 ஆயிரத்து 878 பேர் உழவர் சந்தைகளுக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றதாக வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com