

மானாமதுரை,
சிவங்கை மாவட்ட ரேஷன் கடைகளுக்கு அரிசி வினியோகம் செய்ய தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் கொண்டு வரப்படுகிறது. பின்னர் நவீன அரிசி ஆலைகளில் அரவை செய்து பின் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அரிசி அனுப்பி வைக்கப்படும். இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்திலும் கடும் வறட்சி நிலவியதால், நெல் கொள்முதல் போதுமான அளவு இல்லை. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு மானாமதுரையில் உள்ள நவீன அரிசி ஆலையில் அரைப்பதற்காக சரக்கு ரெயில் மூலம் நேற்று கொண்டு வரப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் அரசு சார்பில் செயல்படும் ஒரே அரிசி ஆலை மானாமதுரை சிப்காட் நவீன அரிசி ஆலைதான். இங்கு நாள் தோறும் 70 டன் நெல் அவித்து அரிசியாக்கப்படுகிறது. பொது வினியோக திட்ட அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் ஆயிரம் டன் நெல் கொண்டு வரப்பட்டு, மானாமதுரை சிப்காட் நவீன அரிசி ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, சிவகங்கை மாவட்ட ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. அடுத்த கட்டமாக இன்னும் ஆயிரம் டன் நெல் வர உள்ளது என்றனர்.