ஆலங்குளத்தில், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்

ஆலங்குளத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி விவசாயிகள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பொதுமக்களுடன் பூங்கோதை எம்.எல்.ஏ.வும் பங்கேற்றார்.
ஆலங்குளத்தில், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்
Published on

ஆலங்குளம்,

ஆலங்குளத்தில் நெல்லை-புதுப்பட்டி சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையானது, விவசாய நிலத்தில் அமைந்துள்ளதாகவும், அதனை அகற்றக்கோரியும் நேற்று முன்தினம் ஆலங்குளம் பொதுமக்கள், விவசாயிகள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அன்றைய தினம் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

நேற்று காலையில் பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு குவிந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குளம் தாசில்தார் சுப்புராயலு, போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அய்யப்பன் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கடையை அகற்றுவது குறித்து ஒரு வாரத்துக்குள் முடிவு எடுப்பதாக அவர் கூறினார். இதனை ஏற்காத பொதுமக்கள், டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என கோஷமிட்டனர்.

இதனை அறிந்து பூங்கோதை எம்.எல்.ஏ.வும் சம்பவ இடத்துக்கு வந்தார். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என அதிகாரிகளிடம் பேசினார்.

பின்னர் மாலையில் போராட்டக்காரர்களிடம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தொடர்பு கொண்டு பேசினார். கடையை இனி திறக்க மாட்டோம். வருகிற 20-ந் தேதிக்குள் வேறு இடத்துக்கு மாற்றி விடுகிறோம் என அவர் உறுதி அளித்தார். இதையடுத்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com