ஸ்ரீபெரும்புதூரில் காரில் கடத்தி ரவுடி வெட்டிக்கொலை

காரில் கடத்தி வந்து ரவுடியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூரில் காரில் கடத்தி ரவுடி வெட்டிக்கொலை
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ராஜீவ் காந்தி நினைவிடம் எதிரே நேற்று மாலை ஒரு கார் வேகமாக வந்து நின்றது. காரில் இருந்து ஒரு நபர் கீழே இறங்கி தப்பி ஓடினார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அதே காரில் இருந்து இறங்கி பட்டா கத்தியால் அந்த வாலிபரை தலை, முகம், கை, கால் பகுதியில் சரமாரியாக வெட்டினர். இதில் அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் காரில் தப்பிச்சென்று விட்டது.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரில் கடத்தி வந்து கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் சென்னையை அடுத்த மடிப்பாக்கம் கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த ரவுடி சங்கர்லால் (வயது 35) என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது மடிப்பாக்கம், புழல், கோவை உள்ளிட்ட போலீஸ் நிலைங்களில் திருட்டு, அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா?, முன்விரோதம் காரணமா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com