தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்

வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வெள்ளையன் வலியுறுத்தி உள்ளார்.
தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
Published on

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு நேற்று வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வணிகர் தினத்தை முன்னிட்டு சென்னையில் 34-ம் வணிகர் உரிமை பிரகடன மாநில மாநாடு வருகிற மே மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தால் ஒவ்வொரு தொழிலாக முடங்கி வருகிறது. விவசாயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் நீர் ஆதாரம் அனைத்து வகையிலும் அழிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணமான உலக வர்த்தக ஒப்பந்தத்தை புறக்கணிக்க வேண்டும். நஞ்சுத்தன்மை வாய்ந்த கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வு பிரசாரம் பல மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு கோர்ட்டு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறையும் நேரத்தில் தமிழக அரசு மதிப்பு கூட்டு வரியை அதிகரித்ததால் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் அதனை சார்ந்துள்ள மற்ற பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு கூடுதல் வரி விதிப்பை கைவிட வேண்டும். அதனை மத்திய அரசும் பரிசீலனை செய்ய வேண்டும்.500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் ஆன்-லைன் வர்த்தகம் வளர்ச்சி பெற்று அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைத்து வருகிறது. ஆனால், இந்தியாவில் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. அன்னிய ஆதிக்கம் தான் விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அழிவை தேடி கொடுக்கிறது. எனவே இந்தியாவை அன்னிய சக்திகளின் ஆதிக்க பிடியில் சிக்காமல் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பேரவையின் நாகை வடக்கு மாவட்ட தலைவர் எம்.என்.ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் பாலையா, மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com