

விருதுநகர்,
குறை கேட்பு கூட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஏராளமானோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
காரியாபட்டி அருகிலுள்ள வக்கணாங்குண்டு, சித்து மூன்றடைப்பு, தோணுகால், வலையங்குளம், சந்திரன்குளம், புளியம்பட்டி ஆகிய கிராமத்தை சேர்ந்தவர்கள் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கான அடையாள அட்டையுடன் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருந்ததாவது;-
5 மாத ஊதியம்
100 நாள் வேலைத்திட்டத்தின்படி எங்களுக்கு வேலை வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டில் ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களிலும் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திலும் வேலை செய்ததற்குரிய ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டும் இன்னமும் ஊதியம் வந்து சேரவில்லை. அவதிப்படும் எங்களுக்கு 5 மாத ஊதியம் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.