

பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சியில் தற்போது 198 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து கர்நாடக அரசு மாநகராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்தது. இந்த மசோதா கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.ரகு எம்.எல்.ஏ. தலைமையில் சட்டசபை கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், பெங்களூரு மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டது. அந்த அறிக்கைக்கு சட்டசபை ஒப்புதல் வழங்கியது.
அதன்படி மாநகராட்சிகள் சட்ட திருத்த மசோதாவில் அந்த அம்சம் சேர்க்கப்பட்டு, இருசபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து அந்த சட்டத்தை, கர்நாடக அரசு அரசாணையாக பிறப்பித்துள்ளது. அதில் பெங்களூரு மாநகராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 198-ல் இருந்து 250 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.