8 வழி சாலை திட்டத்தை அரசு கைவிடும் வரை விவசாயிகளுடன் இணைந்து போராடுவோம் இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு பேட்டி

8 வழி பசுமை சாலை திட்டத்தை அரசு கைவிடும் வரை விவசாயிகளுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி போராடும் என கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.
8 வழி சாலை திட்டத்தை அரசு கைவிடும் வரை விவசாயிகளுடன் இணைந்து போராடுவோம் இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு பேட்டி
Published on


பனமரத்துப்பட்டி,

சேலம்- சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக நிலங்களை அளவீடு செய்து நிலம் கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தேசிய உறுப்பினருமான நல்லகண்ணு நேற்று சேலம் மாவட்டம் பாரப்பட்டி வந்தார். அந்த கிராமத்தில் 8 வழி சாலைக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

இங்குள்ள விவசாயிகள் பூர்வீகமாக விவசாய நிலங்களை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அந்த விவசாயிகளின் நிலத்தை அவர்களிடம் அனுமதி பெறாமலேயே அரசு கையகப்படுத்துவதற்கான முட்டுக்கல் போட்டிருப்பதை அனுமதிக்க முடியாது. இதற்காக அரசு அளிக்கும் பணத்தை வைத்துக்கொண்டு அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. அரசு வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் இங்குள்ள மக்களின் அடிப்படை வாழ்வாரத்தையே அழிக்கிறது.


அரசு இந்த மக்களின் அனுமதியை பெறாமலேயே சட்டத்திற்கு எதிராக நிலங்களை கையகப்படுத்துவதான் வளர்ச்சி திட்டம் ஆகுமா? கையகப்படுத்தப்பட உள்ள ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியே உண்டான மதிப்பை அந்தந்த விவசாயிகளிடம் தெரிவிக்காமலேயே அரசு கையகப்படுத்த முயல்கிறது.

அரசு விவசாயிகளின் நிலங்களை போலீசாரை வைத்து மிரட்டி பிடுங்குவதை நிறுத்த வேண்டும். இந்த 8 வழி சாலை திட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. இந்த திட்டத்தை அரசு கைவிடும் வரை விவசாயிகளுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடைசிவரை போராடும்.

இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com