பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது

திருச்சியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது
Published on

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டுமான ரத்தின சபாபதி திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

1990-ம் ஆண்டுக்கு முன்னர் வரை பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. தற்போது 137 சாதிகளை கொண்ட பிற்படுத்தப்பட்டோர் 4 கோடி பேருக்கு 26.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே அமலில் உள்ளது. ஆகவே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் ஆந்திரா, கர்நாடகா அரசு வழங்கியது போன்று தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு அளிக்க வேண்டும். மத்திய அரசிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் 10 சதவீதத்திற்கும் மேல் கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிமைகள் மறுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து எந்த அரசியல் தலைவர்களும் குரல் கொடுக்கவில்லை. எனவே, இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு கருமண்டபம் எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மதர்லேண்ட் மணிவேல், டாக்டர் காமராஜ் யாதவ், ஸ்ரீதர் யாதவ், தேவராஜன், முத்தையன், சிவானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com