

மும்பை,
சரத்பவார் வீட்டின் முன் நடந்த போராட்டம் தொடர்பாக காம்தேவி சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
போராட்டம்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டின் முன் கடந்த 8-ந் தேதி 100-க்கும் மேற்பட்ட மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சரத்பவார் தங்களது பிரச்சினைகளை தீர்க்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டி அவரது வீட்டின் முன் இந்த போராட்டத்தை நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே அந்த பகுதி துணை கமிஷனர், காம்தேவி போலீஸ் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் ராஜ்பாரை பணியிடமாற்றம் செய்து இருந்தார்.
பணியிடை நீக்கம்
இந்தநிலையில் சீனியர் இன்ஸ்பெக்டர் ராஜ்பார் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதல் கட்ட விசாரணையில் போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் குறித்து சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்பாருக்கு முன் கூட்டியே தகவல் கிடைத்தது தெரியவந்து உள்ளது. ஆனால் அவர் போராட்டத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கவில்லை. எனவே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்றார்.