வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 2½ பவுன் நகை அபேஸ்


வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 2½ பவுன் நகை அபேஸ்
x

வில்லியனூர்

பாலீஷ் போடுவதாக கூறி வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 2½ பவுன் நகையை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தனியாக இருந்த பெண்

புதுச்சேரி அரியூர் வெங்கடேஸ்வரா நகர், 1-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 33). இவரது மனைவி வசந்தி (28) திருவண்டார்கோவிலில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இந்தநிலையில் வேலைக்கு செல்லாமல் வசந்தி வீட்டில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த போது வசந்தியிடம் 30 வயது மதிக்கத்தக்க டிப்-டாப் ஆசாமி ஒருவர் அங்கு வந்து தங்க நகைக்கு பாலீஷ் போடுவதாக கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய வசந்தி தனது கழுத்தில் கிடந்த 2½ பவுன் சங்கிலியை கழற்றி பாலீஷ் போட்டுத் தருமாறு கொடுத்துள்ளார்.

தங்கச்சங்கிலியுடன் ஓட்டம்

அதை வாங்கிக் கொண்ட அந்த ஆசாமி ஏதோ தடவி பாலீஷ் போடுவது போல் நடித்தார். அப்போது தாகமாக இருப்பதாக கூறி தண்ணீர் கேட்டு வசந்தியின் கவனத்தை திசை திருப்பினார்.

அவர் வீட்டுக்குள் சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த ஆசாமி அங்கிருந்து தங்கச்சங்கிலியுடன் ஓட்டம் பிடித்தார். நகையை பறிகொடுத்த வசந்தி செய்வதறியாது கூச்சல் போட்டார்.

இதற்கிடையே அந்த ஆசாமி அங்கு ஏற்கனவே தயாராக நின்று கொண்டிருந்த மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றார். இதுகுறித்து வில்லியனூர் போலீசில் வசந்தி புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையுடன் தப்பிச் சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story