கரும்பு தோட்டத்தில் காட்டுப்பன்றிகளை விரட்டும் 'டிரோன்'
புதுச்சேரியில் முதன் முறையாக காட்டுப் பன்றிகளை விரட்டும் மருந்து டிரோன் மூலம் கரும்பு வயல்வெளியில் தெளிக்கப்பட்டது.
பாகூர்
புதுச்சேரியில் முதன் முறையாக காட்டுப் பன்றிகளை விரட்டும் மருந்து டிரோன் மூலம் கரும்பு வயல்வெளியில் தெளிக்கப்பட்டது.
காட்டுப் பன்றிகளால் தொல்லை
பாகூர், குருவிநத்தம், சோரியங்குப்பம், பரிக்கல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் காட்டுப் பன்றிகள் அட்டகாசத்தால் பயிர்கள் சேதமடைந்து வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு மிகுந்த வேதனையடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, பாகூர் உழவர் உதவியகம் சார்பில், 75-ம் ஆண்டு சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு, காட்டுப் பன்றிகளை விரட்டும் செயல் விளக்க முகாம் குருவிநத்தம் அய்யனார் கோவில் பகுதியில் உள்ள கரும்பு வயல்களில் முதன் முறையாக நடைபெற்றது.
டிரோன் மூலம் மருந்து தெளிப்பு
இந்நிகழ்ச்சிக்கு, பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் சிவபெருமான் தலைமை தாங்கி செயல் விளக்கத்தை தொடங்கி வைத்தார். காட்டுப் பன்றிகளை நிர்வாகம் செய்வது குறித்து வேளாண் அலுவலர் பரமநாதன் விளக்கினார்.
பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிைலயத்தில் இருந்து ஹெர்போலின் என்ற மருந்தை பெற்று டிரோன் மூலம், கரும்பு விவசாய வயல்களில் சோதனை முறையில் தெளிக்கப்பட்டது.
சுமார் 5 ஏக்கர் கரும்பு நிலப்பரப்பில் காட்டுப்பன்றிகளை விரட்டும் வகையில் இந்த மருந்து தெளிக்கப்பட்டது. டிரோன் மூலம் காட்டுப்பன்றிகளை விரட்டுவது புதுச்சேரியில் இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவில் வட்டார வளர்ச்சி மேலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் முத்துகுமரன், பாஸ்கரன் மற்றும் குனசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பாகூர், இருளன்சந்தை, பரிக்கல்பட்டு, குருவிநத்தம் மற்றும் சோரியாங்குப்பம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.