வயல்களில் டிரோன் மூலம் யூரியா தெளிப்பு


வயல்களில் டிரோன் மூலம் யூரியா தெளிப்பு
x

காரைக்கால் மாதூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வயல்களில் டிரோன் மூலம் யூரியா தெளிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

காரைக்கால்

ஐதராபாத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் மத்திய வறண்ட நில வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும், தேசிய பருவநிலை மாற்றத்திற்கு உகந்த மீள் தன்மையுள்ள வேளாண் திட்டத்தின் (நிக்ரா) கீழ், நேனோ யூரியாவை டிரோன் மூலம் பயன்படுத்தும் முறை பற்றிய செயல்விளக்கம் திருநள்ளாறு பேட்டை, அத்திப்படுகை மற்றும் நெய்வாச்சேரி கிராமங்களில் உள்ள வயல்களில் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.

வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசங்கர் முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், விவசாயிகள் நெல் பயிருக்கு தேவையான தழைச்சத்தை யூரியா வடிவத்தில் கொடுக்கின்றனர். மண் பரிசோதனை செய்யாமலேயே யூரியாவை விவசாயிகள் மண்ணில் இடுவதன் காரணமாக, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இதனை கையாளும் விதமாக இப்கோ நிறுவனத்தின் நேனோ யூரியாவை இலை வழியாக டிரோன் மூலம் தெளிப்பதால் நெற்பயிர் தழைச்சத்தை நேரடியாக எடுத்துக்கொண்டு நேனோ யூரியாவின் பயன்படுத்தும் திறனை அதிகரித்து நெற்பயிரின் மகசூலை அதிகரிக்கலாம் என்றார்.

தொழில்நுட்ப வல்லுநர் (உழவியல்) அரவிந்த், நேனோ யூரியாவை டிரோன் மூலம் பயன்படுத்தும் முறை, அளவு மற்றும் அதன் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.


Next Story