கோவை சிறுமி கொலை: ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக நடந்துகொள்ள வேண்டும் - ஈபிஎஸ் கண்டனம்

ஏதுமறியா சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை அரசின் அலட்சியத்தையும் செயல்திறன் குறைவையும் சுட்டிக்காட்டுகிறது.
கோவை சிறுமி கொலை: ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக நடந்துகொள்ள வேண்டும் -  ஈபிஎஸ் கண்டனம்
Published on

கோவை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்த அரசு, இத்தகைய கொடூர சம்பவங்களை தடுக்க தவறியது வேதனைக்குரியது. சிறுமி காணாமல் போன சில மணி நேரத்திலேயே புகார் அளிக்கப்பட்டிருந்த போதிலும், துரிதமான நடவடிக்கை எடுக்கப்படாதது சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக திறனில் உள்ள குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது. பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு ஏதுமறியா சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை அரசின் அலட்சியத்தையும் செயல்திறன் குறைவையும் சுட்டிக்காட்டுகிறது.

இந்த அரசு பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் அல்லாமல், நிலையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்ட வேண்டும். வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாகவும் நடந்து கொள்ள வேண்டும். இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன், குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com