

கள்ளக்குறிச்சி
மணிமுக்தா அணை
கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையின் மொத்த கொள்ளளவு 36 அடியாகும். தற்போது 16.20 அடி நீர் உள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையின் காரணமாக இந்த அணைக்கு கல்வராயன் மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் மணி ஆறு மற்றும் முக்தா ஆற்றின் மூலம் வினாடிக்கு 50 கனடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மணிமுக்தா அணையை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அணையின் மொத்த கொள்ளளவு, நீர் வெளியேற்றம், விவசாய பாசன பரப்பளவு உள்ளிட்ட விவரங்களை பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
பின்னர் அணையின் மதகு சீரமைப்பு பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்த அவர் பருவமழை தொடங்குவதற்கு முன் அணையின் அனைத்து பாதுகாப்பு பணியினையும் விரைந்து முடித்திட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அணையின் நீர் பிடிப்பு அளவை அதிகரிக்க அணையில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
இதுபோல் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் மழைநீரை சேகரித்து நீர் ஆதார அமைப்பை உருவாக்கிட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மணிமுக்தா அணை உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி பொறியாளர் விஜயகுமரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.