களை நீங்கி விட்டது: 2026 தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி


களை நீங்கி விட்டது:  2026 தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 30 Oct 2025 4:13 PM IST (Updated: 30 Oct 2025 4:15 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வின் கோட்டையிலேயே, செங்கோட்டையனால் வெற்றி பெற முடியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது. பசும்பொன்னில் இன்று (வியாழக்கிழமை) தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவரான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர், மதுரை கப்பலூரில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டியின்போது, 2021 நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது பற்றி அவர் பேசினார். துரோகிகளால்தான் 2021-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போய் விட்டது.

கட்சியில் நடந்த உள்குத்து வேலைகளால்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடியவில்லை. ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் மூன்று பேருமே தி.மு.க.வின் பி டீம் போன்று செயல்படுகிறார்கள். அவர்கள் 3 பேர் இல்லாத நிலையில், தென் மாவட்டங்களில் அ.தி.மு.க. பலவீனமடைந்து விட்டது என கூறுவது தவறு. அவர்கள் 3 பேர் ஒன்றிணைவது பற்றி பேசுவதே வீண் என்றார்.

இதேபோன்று, செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்த களைகள் அகற்றப்பட்டு உள்ளன. அதனால், அ.தி.மு.க. நன்றாக செழித்து வளரும். அடுத்து ஆட்சி அமைக்கும். செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு எந்த தயக்கமும் இல்லை. கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அ.தி.மு.க.வின் கோட்டையிலேயே, செங்கோட்டையனால் வெற்றி பெற முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

1 More update

Next Story