திருப்பூரில் பரிதாபம்: சுத்திகரிப்பு தொட்டியில் மூழ்கி மாணவன் பலி

ஓட்டல் வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் அருகே சென்று சிறுவர்கள் 2 பேரும் விளையாடி கொண்டிருந்தனர்.
தொட்டியில் மூழ்கி மாணவன் பலி
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம், கோம்பை தோட்டம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் முகமது ரியாஸ் (வயது34). இவர், பொக்லைன் எந்திர ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி அனிஸ் பாத்திமா (31). இந்த தம்பதியின் மகன் முகமது ஆரிப் (8). இவன் 4-ம் வகுப்பு செல்ல இருந்தான்.

இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் தனது நண்பனுடன், முகமது ஆரிப் விளையாட சென்றான். அப்போது அருகில் மூடிக்கிடந்த ஒரு தனியார் ஓட்டலின் பின்பக்க கதவு சற்று திறந்த நிலையில் இருந்தது. இதனைக்கண்ட முகமது ஆரிப்பும், அவனது நண்பனும் உள்ளே சென்றனர். அந்த ஓட்டல் வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் அருகே சென்று சிறுவர்கள் 2 பேரும் விளையாடி கொண்டிருந்தனர்.

தொட்டியில் மூழ்கி பலி

நீச்சல் குளத்தின் அருகே, தண்ணீரை சுத்திகரிப்பதற்காக தண்ணீர் தொட்டி இருந்தது. 12 அடி ஆழம் கொண்ட அந்த தொட்டியில் 7 அடிக்கு தண்ணீர் இருந்தது. இந்த சுத்திகரிப்பு தண்ணீர் தொட்டி கான்கிரீட் சிலாப்பால் மூடி வைக்கப்பட வில்லை. மாறாக மரப்பலகையை வைத்து மூடப்பட்டிருந்தது. அந்த பலகையின் மேல் முகமது ஆரிப் நடந்து சென்றான்.

அப்போது எதிர்பாராத விதமாக பலகை உடைந்து அவன் தொட்டியின் உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் நண்பன் ஓடிச்சென்று முகமது ஆரிப்பின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தான். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் முகமது ஆரிப்பின் உடலை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com