

பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியை சேர்ந்தவர் சுப்பையா. இவர் மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சொந்த ஊரான வேந்தன்பட்டியில் கடந்த மே 1-ந்தேதி நடந்த வைகாசி விசாக திருவிழாவை முடித்துவிட்டு மதுரைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள வெண்கலப்பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மேலைச்சிவபுரி பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின் படி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் புதுக்கோட்டை தெற்கு சந்தை வீதியை சேர்ந்த மணி மகன் ரவிச்சந்திரன் (வயது 24) என்பதும், இவர் சுப்பையா வீட்டில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ரவிச்சந்திரனை கைது செய்து, அவரிடமிருந்து வெண்கலப்பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.