‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார் - ப.சிதம்பரம் டுவீட்


‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார் - ப.சிதம்பரம் டுவீட்
x
தினத்தந்தி 5 April 2021 4:03 AM GMT (Updated: 5 April 2021 4:05 AM GMT)

‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தலில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசாரை உள்ளடக்கிய பறக்கும் படையினர் பல்வேறு வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் 

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து கடந்த வெள்ளிக்கிழமை (2-ம் தேதி) பாஜக இளைஞரணி தலைவரும், பெங்களூர் தெற்கு தொகுதி எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா பிரசாரம் செய்தார். அப்போது பேசிய தேஜஸ்வி சூர்யா, ‘தமிழகத்தில் போட்டி என்பது அரசியல் ரீதியானது மட்டுமல்ல கொள்கை ரீதியிலானது. தமிழகத்தில் பெரியாரிசத்தை (பெரியார் கொள்கைகள்) முடிவுக்கு கொண்டுவருவதே பாஜக-வின் விருப்பம்’ என்றார்.

இந்நிலையில், பாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யாவின் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ப.சிதம்பரம் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ’தமிழ்நாட்டில் ‘பெரியாரிசம்’ (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே பாஜக இங்கு வந்திருக்கிறது என்று பாஜக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். ‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார். 

தமிழ் நாகரிகத்தையும் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணா. 

தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அஇஅதிமுக பாஜக தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை? 

தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக EPS-OPS (எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்) கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?’ என தெரிவித்துள்ளார்.



Next Story