

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கு 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர 24 நிலையான கூர்ந்தாய்வுக்குழுக்கள், 16 வீடியோ கூர்ந்தாய்வுக்குழுக்கள் உள்ளன.
இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி, உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக, தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்து குவிகின்றன.
இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை பிடிப்பதற்கு, கூடுதலாக 8 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் மலைக்கிராமங்கள் நிறைந்த பழனிக்கு 2 பறக்கும் படைகளும், இதர 6 தொகுதிகளுக்கு தலா ஒரு பறக்கும் படையும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த பறக்கும் படையினர் குறிப்பிட்ட சில பகுதிகளை இலக்காக வைத்து ரோந்து சுற்று வருகின்றனர்.
அதோடு தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் இருக்கிறார்களா? என்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.