இலங்கையில் கொலை வழக்கில் முன்னாள் போராளி பிள்ளையான் விடுதலை


இலங்கையில் கொலை வழக்கில் முன்னாள் போராளி பிள்ளையான் விடுதலை
x
தினத்தந்தி 14 Jan 2021 12:17 AM GMT (Updated: 14 Jan 2021 12:17 AM GMT)

பிள்ளையானுக்கு எதிரான கொலைவழக்கைத் தொடர விரும்பவில்லை என்று இலங்கை அட்டர்னி ஜெனரல் அலுவலகம், மட்டக்களப்பு கோர்ட்டில் தெரிவித்தது.

கொழும்பு, 

இலங்கையில் தனி ஈழத்துக்காக ஆயுதப் போராட்டம் நடத்திய விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சிறுவர் போராளியாக இருந்தவர், பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன். கடந்த 2004-ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவுடன் பிரிந்த பிள்ளையான், சிங்கள ராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டார்.

விடுதலைப்புலிகளுக்கு பலத்த அடியாக அமைந்த கிழக்கு மாகாண போரில் பிள்ளையான் முக்கிய பங்கு வகித்தார். கருணாவுடன் அரசியலில் ஈடுபட்ட இவர், சிங்கள அரசின் ஆதரவோடு கிழக்கு மாகாண முதல்-மந்திரி ஆனார்.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே முந்தைய தேர்தலில் தோல்வியுற்றதும், பிள்ளையான் கைது செய்யப்பட்டார். மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு பிள்ளையான் வென்றார். இவரது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவான கட்சி ஆகும்.

இந்நிலையில் இந்த வாரம், பிள்ளையானுக்கு எதிரான கொலைவழக்கைத் தொடர விரும்பவில்லை என்று இலங்கை அட்டர்னி ஜெனரல் அலுவலகம், மட்டக்களப்பு கோர்ட்டில் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து பிள்ளையானை கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அவருடன் மேலும் 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story