இறை உணர்வுடன் இறையில்லத்தில் தஞ்சம்


இறை உணர்வுடன் இறையில்லத்தில் தஞ்சம்
x
தினத்தந்தி 29 Aug 2019 10:02 AM GMT (Updated: 29 Aug 2019 10:02 AM GMT)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வரு கிறோம். இந்த வாரம் இறைநம்பிக்கைகளில் ஒன்றான ‘இறை உணர்வுடன் இறையில்லத்தில் தஞ்சம் இருப்பது’ குறித்த தகவல்களை காண்போம்.

‘இஃதிகாப்’ என்பது உடல் சார்ந்த இறைநம்பிக்கை. இதன் பொருள், ஒரு செயலை பற்றிப்பிடித்துக் கொண்டு, அதன் மீது மனதை பறிகொடுத்து, அதை சிறைவைப்பது ஆகும்.

இஸ்லாம் கூறும் இஃதிகாப் என்பது ரமலான் மாதத்தில் பிறை 21-ல் இருந்து 30 வரை கிட்டத்தட்ட பத்து நாட்கள் வரை நோன்பாளிகள் ஜூம்ஆ எனும் வெள்ளிக்கிழமை சிறப்புத்தொழுகை நடைபெறும் இறையில்லம் சென்று, இறைவனிடம் தஞ்சமடைந்து, உலக காரியங்களிலிருந்து விலகி, மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை இனியமுறையில் தியானிப்பதற்கு சொல்லப்படும்.

இந்த தியானத்தில் உடல் சார்ந்த பங்களிப்புகள் அதிகம் இருப்பதால் இது உடல் சார்ந்த இறைநம்பிக்கையாகவும், உடல் சார்ந்த வணக்கமாகவும் உற்று கவனிக்கப்படு கிறது.

மனது இறை சிந்தனையில் திளைத்தாலும், உடல் இறை உணர்வுடன், இறைபக்தியுடன் செயல்படும். பசித்திருப்பது, தனித்திருப்பது, விழித்திருப்பது போன்ற உடல்கூறு அம்சங்கள் இஃதிகாபில் வெளிப்படுகிறது.

ஒரு முஸ்லிம் ரமலானின் கடைசிப் பத்து தினங்களில் ஏதேனும் ஒரு இறையில்லத்தில் இஃதிகாப் இருந்து வரும் போது, பசித்திருந்து நோன்பிருப்பது, தனித்திருந்து தியானிப்பது, விழித்திருந்து இரவு வணக்கத்தில் ஈடுபடுவது என்பன போன்ற செயல்பாடுகள் அரங்கேற்றப்படுகிறது. அவரின் உடல் ஒரு பக்கம் நோன்பிருக்கிறது. மறுபக்கம் தனிமையில் தியானிக்கிறது. இன்னொரு பக்கம் விழித்துக் கொண்டே விழிப்புணர்வுடன் செயல்படுகிறது.

நோன்பு என்பது உள்ளம் சார்ந்த சீர்திருத்தத்தை செவ்வன செய்கிறது என்றால், இஃதிகாப் என்பது உடலை சீர் செய்கிறது. பாவங்களிலிருந்து உட லுறுப்புகளை பாதுகாக்கிறது. இதன் அழகிய விவரத்தை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:

‘அறிந்து கொள்ளுங்கள், மனித உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீராகி விட்டால் (மனித) உடலுறுப்புகள் யாவும் சீராகிவிடும். அது பாழாகி விட்டால் உடலுறுப்புகள் யாவும் பாழாகிவிடும். அறிந்து கொள்ளுங்கள் அதுதான் உள்ளம் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவி மடுத்துள்ளேன்’. (அறிவிப்பாளர்: நுஃமான் பின் பசீர் (ரலி), புகாரி)

‘இஃதிகாப் இருப்பவர் பாவங்களை விட்டும் பாதுகாக்கப்படுகிறார்; நற்செயல் கள் அனைத்தையும் செய்பவரைப் போன்ற நன்மைகள் அவருக்கு எழுதப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: இப்னுமாஜா)

இஃதிகாபின் செயல்பாடுகள் மூன்று விதங்கள் ஆகும். அவை:

1) அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் இறையில்லத்திற்கு சென்று வரும்போது ‘இந்த இறையில்லத்தில் இருக்கும் போதெல்லாம் நான் இறைஉணர்வோடு, இஃதிகாப் எண்ணத்தோடு, இறையில்லத்தின் தொடர்பில் இருக்கிறேன்’ என மனதில் உறுதி கொள்ள வேண்டும். இதற்கு உபரியான (நபில்) இஃதிகாப் என்று கூறப்படுகிறது.

2) எனக்கு ஏதேனும் தேவை நிறைவேறினால், இறைவனின் நாட்டப்படி இத்தனை நாள், அல்லது ஒரு பகல், அல்லது ஒரு இரவு இறையில்லம் சென்று, இறைவுணர்வுடன் இறைதொடர்பில் என் உடலையும், என் உள்ளத்தையும் ஐக்கியமாக்கிக் கொள்கிறேன் என்று நேர்ச்சை செய்வது. இவ்வாறு நேர்ச்சை செய்வது கடமை (வாஜிப்) ஆகும். அதை நிறைவேற்றுவது கட்டாயமாகிவிடும்.

‘மஸ்ஜிதுல் ஹராமி (கஅபாவி)ல் ஓர் இரவு இஃதிகாப் இருப்பதாக அறியாமைக்காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்’ என்று உமர் (ரலி) நபி (ஸல்) அவர் களிடம் கூறினார். அதற்கு நபிகளார் ‘உமது வேண்டுதலை நிறைவேற்றுவீராக’ என்றார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), புகாரி)

இறையில்லத்தில் இஃதிகாப் இருப்பதாக வேண்டுதல் வைத்தால் அந்த வேண்டுதலை நிறைவேற்றுவது கட்டாயம் (வாஜிப்) ஆகிவிடும்.

3) ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள் முழுவதுமோ, அல்லது ஓரிரு நாட்களோ இறையில்லத்தில் இஃதிகாப் இருப்பது வலியுறுத்தப்பட்ட நபி வழிமுறை ஆகும்.

ரமலானில் கடைசிப் பத்து தினங்களில் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் தொடராக இஃதிகாப் இருந்து வந்துள்ளார்கள். இது நபி (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்டது மட்டும் அல்ல, இறைவனாலும் வலியுறுத்தப்பட்ட வணக்கமாகத் திகழ் கிறது.

‘நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. உங்களுக்கு நீங்களே துரோகம் செய்து கொண்டிருந்தது இறைவனுக்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று, உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள், இறைவன் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள். வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிற்றிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள். பள்ளிவாசல்களில் தனித்து (இஃதிகாப்) இருக்கும்போது மனைவியருடன் கூடாதீர்கள். இவை இறைவனின் வரம்புகள். எனவே, அவற்றை நெருங்காதீர்கள். தன்னை அஞ்சுவதற்காகத் தனது வசனங்களை இறைவன் மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்’. (திருக்குர்ஆன் 2:187)

சூரியன் அஸ்தமானதில் இருந்து மறுநாள் சூரியன் அஸ்தமாகும் வரைக்கும், ஒரு நாள் இஃதிகாபாக கருதப்படுகிறது. ரமலானில் இஃதிகாப் இருப்பதின் பிரதான நோக்கம் யாதெனில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ‘லைலத்துல்கத்ர்’ எனும் கண்ணியமிக்க இரவின் பலனை அடைவதாகும்.

ஆரம்ப காலங்களில் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் ‘லைலத்துல் கத்ரை’ அடைய மஸ்ஜித் நபி பள்ளிவாசலில் ரமலானின் முதல் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். அதில் அந்த இரவு இல்லை எனத் தெரிந்ததும் இரண்டாவது பத்தில் இஃதிகாபை தொடர்ந்தார்கள். இரண்டாவது பத்திலும் அது இல்லை என அறிந்ததும் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலினுள் அமைக்கப்பட்ட கூடாரத்திலிருந்து வெளியேறி, ‘தோழர்களே, லைலத்துல்கத்ரைத் தேடி முதல் பத்து, மற்றும் இரண்டாவது பத்து ஆகிய இருபது நாட்கள் நாம் இஃதிகாப் இருந்தோம். எனினும், அது கடைசிப் பத்து நாட்களில் ஏதேனும் ஓர் இரவில் அமைந்திருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே நான் கடைசிப் பத்திலும் இஃதிகாபை தொடரப் போகிறேன். என்னுடன் தொடர விரும்புபவர்கள் தொடரலாம்’ என்றார்கள்.

‘நபி (ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), புகாரி)

‘நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் (கடைசிப்) பத்து தினங்கள் இஃதிகாப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் (நடுப்பத்தையும் சேர்த்து) இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி)

ஒரு மனிதன் வாழ் நாளின் கடைசி கட்டத்தை அடையும் போது, உலகத் தொடர்புகளை ஓரங்கட்டி விட்டு, இறையில்லத் தொடர்பையும், இறைவனின் நெருக்கத்தையும் இஃதிகாப் மூலம் பெற வேண்டும் என்பதை நபிகளாரின் இந்த செயல் ஒரு விழிப்புணர்வாக அமைந்திருக்கிறது.

ஆண்கள் இறையில்லங்களில் இஃதிகாப் இருப்பது போன்று, பெண்களும் தங்களது இல்லங்களில் இஃதிகாப் இருக்கலாம். இதற்கான அனுமதியை, இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.

‘நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்தார்கள். அவர் களுக்குப் பின் அவர் களின் மனைவியர் இஃதிகாப் இருந்தனர்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி)

பெண்களைப் பொறுத்த அளவில் தமது இல்லத்தின் ஒரு ஓரப்பகுதியில் இஃதிகாப் எண்ணத்தில் இருந்து கொண்டே வீட்டு வேலைகளையும், கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், குடும்பத்தின் பிற உறவினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தாராளமாகச் செய்யலாம். வீட்டை விட்டு அவசியமில்லாமல் வெளியே செல்லக்கூடாது. ஆண்களை விட பெண்களுக்கு இஃதிகாப் இருப்பது மிகவும் இலகுவானதாகும். பெண்கள் இதற்கு தமது கணவரிடம் முன் அனுமதி பெற வேண்டியது அவசியமானது.

இஃதிகாபின் நன்மைகள் வருமாறு:

இஃதிகாப் இருக்கும் போது, இறையில்லத்தில் தங்குவதினால் இறையில்ல நேசம் உள்ளத்தில் உதிக் கிறது. இறையில்லத்தில் தங்குவதால் தொழுகைகளை எதிர்பார்த்து இருக்கும் வாய்ப்பும், நன்மையும், வானவர்களின் ‘இறைவா, அவரை மன்னிப்பாயாக, அவருக்கு கிருபை செய்வாயாக’ என்ற பிரார்த்தனையும் கிடைக்கிறது.

இஃதிகாப் இருப்பதினால் உலகப்பற்று குறைந்து, இறைப்பற்று அதிகமாகிவிடுகிறது. இஃதிகாப் இருப்பதினால் தூங்குவது கூட இறைவணக்கமாக எழுதப்படுகிறது.

இஃதிகாப் பொறுமையை கற்றுத் தருகிறது. அது மன அமைதியை கொடுக்கிறது. திருக்குர் ஆனை ஓதுவதற்கும், அதன் தொடர்பில் நிலைத்திருப்பதற்கும் அது வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இஃதிகாப், பாவ மீட்சி பெற பக்குவப்படுத்துகிறது. இரவு வணக்கம் புரிய வைக்கிறது. உள்ளத்தை தூய்மைப்படுத்துகிறது. உள்ளத்தை சீர்படுத்துகிறது.

இஃதிகாப் இருப்போர் தமது நலனுக்கும், தமது குடும்ப நலனுக்கும், நாட்டு நலனுக்கும், உலக அமைதிக்கும், சமூக ஒற்றுமைக்கும், மக்கள் நல்வாழ்விற்கும், அதிகம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார்.

மேற்கண்ட நன்மைகள் இஃதிகாப் இருப்பதன் மூலம் பெறலாம்.

(நம்பிக்கை தொடரும்)

Next Story