லட்சுமி கடாட்சத்தை வழங்கும் ரம்பை திருதியை


லட்சுமி கடாட்சத்தை வழங்கும் ரம்பை திருதியை
x
தினத்தந்தி 16 Dec 2020 12:00 AM GMT (Updated: 15 Dec 2020 12:24 AM GMT)

‘அட்சய திருதியை’ அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த நல்ல நாளில், ஏதாவது ஒரு பொருள் வாங்கினால், வீட்டில் ஐஸ்வர்யம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.

குடும்ப நலனுக்காகவும், கணவன்- மனைவி ஒற்றுமைக்காகவும், நீண்ட ஆயுள் வேண்டியும் பெண்கள் இருக்கும் விரதத்திற்கு ‘ரம்பை திருதியை’ என்று பெயர். அனைத்து வளங்களும், நலன்களும் வேண்டும் என்பதற்காக, தேவலோக கன்னிகையான ரம்பை செய்த பூஜையே, ‘ரம்பை திருதியை’ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விரதமுறை வந்த கதையைப் பற்றி பார்ப்போம்.

தேவலோகத்தில் உமையவளுக்குத் தோழிகளாக இருப்பவர்கள், அரம்பையர்கள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, இவர்கள் கடலுக்குள் இருந்து வெளிப்பட்டதாகப் புராணங்கள் சொல்கின்றன. இவர்கள் தாங்கள் என்றும் இளமை மாறாத கன்னியர்களாகத் திகழ வேண்டும்; தங்களுக்கென்று தனி உலகம் வேண்டும் என்று சிவபெருமானை வேண்டினார்கள்.

சிவபெருமானும் அவர்களுக்காக ஓர் உலகத்தைப் படைத்தார். அது “அரம்பையர்கள் லோகம்’ எனப்பட்டது. அந்த உலகத்தில் பாற்கடலில் தோன்றிய அறுபதாயிரம் அரம்பையர் பெண்களும் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு தலைவியாக இருந்தவள் ரம்பை. அரம்பையர்கள் சிவ பூஜையினை மேற்கொள்பவர்களாகத் திகழ்ந்ததுடன் உமையவளுக்கு தோழியராகவும் இருந்தார்கள். இவர்களில் ரம்பை, அலம்புசை, மனோகரை, ஊர்வசி, கலாநிதி, கனகை, மேனகை, திலோத்தமை, சந்திரலேகை என்பவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்கள். இவர்களை ‘அப்சகணம்’ என்று அழைப்பார்கள்.

இந்த அழகான அரம்பையர்கள், பல வகையான இசைக் கருவிகளை மீட்டியபடி இனிய குரலில் பாடுவார்கள். ஆடல் கலையில் வல்லவர்கள். பாற்கடலில் தோன்றிய இவர்களை வழிபட்டால் மகிழ்ச்சியும் செல்வமும் இளமைத் தோற்றமும் கிட்டும் என்று புராணங்கள் சொல்கின்றன. ஆனி மாதத் திருதியை இவர்களுக்குரிய நாள் என்றும், கார்த்திகை மாத சுக்லபட்ச திருதியை நாளே இவர்களுக்குரியது என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன. இந்நாளில் அரம்பையர்களை வழிபடும் வழக்கம் முற்காலத்திலேயே இருந்துள்ளது. இது, காலம் செல்ல செல்ல வழிபடும் வழக்கம் மருவி தற்பொழுது, வடநாட்டில் மட்டும் இந்நாளில் லட்சுமி பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.

கார்த்திகை மாத வளர்பிறை திருதியை திதி அன்று, ரம்பை திருதியை விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால், அரம்பையர்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். என்றும் அழகு குன்றாமலும், இளமைத் தோற்றத்துடனும், லட்சுமி கடாட்சம் நிறைந்தும் வாழ வழி வகுப்பார்கள். கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.

திருப்பைஞ்ஞீலி என்ற திருத்தலத்தில் பார்வதி சிவபெருமானை வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி நிழல் தந்து உதவி, அவர்களது அருளைப் பெற்றனர். வாரணாசி யில் மேனகையும், திருக்கழுக்குன்றத்தில் திலோத்தமையும், சிவபெருமானை வழிபாடு செய்து அருள் பெற்றனர்.

திருநீலக்குடி, பந்தநல்லூர் போன்ற இடங்களிலும் பல அரம்பையர்கள் வழிபாடு செய்து அருள் பெற்றதாக தலபுராணங்கள் குறிப்பிடுகின்றன.

Next Story