அரிப்பை ஏற்படுத்தி உடலை ரணமாக்கும் கரப்பான் நோய்..!
கரப்பான் நோய் என்பது தோலில் ஏற்படும் அலர்ஜி (எக்சிமா) ஆகும்.
தோல் வறட்சி, அரிப்பு, தடிப்பு, படை, தோல் கருத்தல் போன்ற அறிகுறிகளுடன் இந்த நோயின் தாக்கம் இருக்கும்.
இந்த நோய் எந்த வயதிலும், யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். அலர்ஜி, ஆஸ்துமா இருப்பவர்களுக்கு கரப்பான் நோய் வர அதிக வாய்ப்புண்டு.
கைகள், கழுத்து, முழங்கைகள், கணுக்கால் மேல்பகுதி, முழங்கால்கள், பாதம், முகம், காதுகளுக்குள்ளும் அதைச் சுற்றியும், உதடுகள், மார்பகங்கள், ஆண், பெண் பிறப்புறுப்பைச் சுற்றியும் இந்த எக்சிமா நோய் வரலாம்.
இந்தத் தோல் நோய் வந்த இடத்தில், முதலில் தோல் காய்ந்து போகும். பின் அரிப்பு எடுக்கும். இதனால் சொரியத் தூண்டும். சொரிந்தபின் அந்த இடம் சிவந்து போகும்.
இந்த நோய் வந்தவர்கள், தோலை உலர்ந்து போகவிடக்கூடாது. தேங்காய் எண்ணெய் அல்லது சோற்றுக்கற்றாழை கிரீம்கள் இப்படி ஏதாவதொன்றை அந்த இடத்தில் தடவி, வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தோல் அலர்ஜியை உண்டாக்கக்கூடிய பொருட்கள், உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். நிரந்தர தீர்வுக்கு சரும நோய் சிகிச்சை நிபுணரைச் சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொள்வது சிறந்தது.