அருமையான கிராமத்து ஸ்டைல் நெத்திலி கருவாட்டுக் குழம்பு..!

தேவையான பொருட்கள் : கருவாடு - 200 கிராம், கத்தரிக்காய் - 1/4 கிலோ, உருளைக்கிழங்கு - 2, பச்சை மிளகாய் - 2 ,தக்காளி - 2 (நறுக்கியது), புளி - 1 எலுமிச்சை அளவு, கடுகு - 1/2 டீஸ்பூன் ,கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு… சின்ன வெங்காயம் - 1 கையளவு, மல்லித் தூள் - 50 கிராம், சீரகம் - 1/2 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், வரமிளகாய் - 2 ,கறிவேப்பிலை - சிறிது, பூண்டு - 4 பற்கள், துருவிய தேங்காய் - 1/4 கப் ஆகியவை.
கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். கத்தரிக்காய், உருளைக்கிழங்கு. ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய் சேர்த்து வறுத்து, பின் அதனுடன் சின்ன வெங்காயம், மல்லித் தூள், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி இறக்கி ஆற வைக்கவும்.
பின்னர் கலவையை மிக்ஸி அல்லது அம்மியில் போட்டு, அதனுடன் தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
காய்கள் நன்கு வெந்ததும், அதில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, நன்கு கொதிக்க விடவும்.
புளிச்சாறானது நன்கு கொதித்ததும், அதில் கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான கருவாட்டுக் குழம்பு ரெடி!!!
Explore