தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

குடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும், வைட்டமின் ஏ, ஈ, சி, பி2, பி12 மற்றும் கரோட்டினாய்டு போன்ற அத்தியாவசிய சத்துக்களும் தயிரில் நிறைந்திருக்கின்றன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை விரும்புவார்கள். இவ்வாறு சாப்பிடுவது நன்மையா என்பதை தெரிந்துகொள்வோம்.

ஆயுர்வேத மருத்துவத்தின்படி தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடும்போது, மூளையின் செயல்பாட்டுக்குத் தேவையான குளுக்கோஸ் போதுமான அளவு கிடைக்கும்.

தயிர் மற்றும் சர்க்கரை கலவை, உடலின் ஆற்றலை அதிகரித்து, நாள் முழுவதும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.

தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் செரிமான மண்டலம் குளிர்ச்சி அடையும். வயிற்றில் உருவாகும் அதிக அளவிலான அமிலச் சுரப்பும், அதனால் உண்டாகும் நெஞ்செரிச்சலும் கட்டுப்படும்.

மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால், மசாலா மற்றும் காரம் காரணமாக ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறையும்.

உடல் பருமன் பிரச்சினையால் சிரமப்படுபவர்கள், தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்ப்பது நல்லது.

சளி, ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளால் அவதிப் படுபவர்களும், தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.