ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்
x
தினத்தந்தி 11 Nov 2020 11:02 PM GMT (Updated: 11 Nov 2020 11:02 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்.

புதுடெல்லி,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. 734 சிக்சர்கள், 1582 பவுண்டரிகள் என்று ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்த இந்த ஐ.பி.எல்.-ல் பெரிய தொகைக்கு விலைபோன நிறைய வீரர்கள் ஜொலிக்கவில்லை. உதாரணமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ரூ.10¾ கோடிக்கு வாங்கப்பட்ட கிளைன் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) 13 ஆட்டத்தில் வெறும் 108 ரன் மட்டுமே எடுத்தார். அவர் மட்டும் தனது திறமைக்கு ஏற்ப அதிரடி காட்டியிருந்தால் நிச்சயம் பஞ்சாப் அணி பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்திருக்கும். இதனால் அடுத்த சீசனில் அவரை கழற்றி விட அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதே சமயம் சிறிய தொகைக்கு எடுக்கப்பட்ட சர்வதேச போட்டி அனுபவம் இல்லாத இந்திய இளம் வீரர்கள் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்க சிலரது விவரம் வருமாறு:-

டி.நடராஜன் (ஐதராபாத் சன்ரைசர்ஸ்): 2018-ம் ஆண்டு ஐதராபாத் அணியால் ரூ.40 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு 2018, 2019-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த ஐ.பி.எல்.-ல் யார்க்கர் வீசுவதில் கில்லாடியாக உருவெடுத்த 29 வயதான நடராஜன் எதிரணியின் ரன்வேகத்தை இறுதிகட்டத்தில் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். பெங்களூருக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்றில் அபாயகரமான பேட்ஸ்மேன் டிவில்லியர்சை யார்க்கரில் வீழ்த்திய விதம் சிலிர்க்க வைத்தது. 16 ஆட்டங்களில் 16 விக்கெட் கைப்பற்றிய அவருக்கு அதன் மூலம் ஆஸ்திரேலிய 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் கால்பதிக்கும் அதிர்ஷ்டமும் கிட்டியுள்ளது.

வருண் சக்ரவர்த்தி (கொல்கத்தா): தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி ரூ.4 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார். சுழலில் 7 விதமாக வீசும் திறன் படைத்த வருண் சக்ரவர்த்தி இந்த ஐ.பி.எல்.-ல் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் (டெல்லிக்கு எதிராக) வீழ்த்திய ஒரே பவுலர் ஆவார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியை இரண்டு முறை கிளீன் போல்டு ஆக்கியது சிறப்பு அம்சமாகும். 28 வயதான வருண் 13 ஆட்டத்தில் 17 விக்கெட்டுகளை (ஓவருக்கு சராசரி 6.84 ரன் விட்டுக்கொடுத்தார்) அறுவடை செய்தார். அந்த அணிக்காக ரூ.15½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்சை விட (14 ஆட்டத்தில் 12 விக்கெட்) இது அதிகமாகும். ஐ.பி.எல்.-ல் கலக்கியதால் வருண் சக்ரவர்த்தி இந்திய அணிக்கும் தேர்வானார். துரதிர்ஷ்டவசமாக காயத்தால் விலக நேரிட்டது.

தேவ்தத் படிக்கல் (பெங்களூரு): கர்நாடக அணிக்காக முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடக்கூடிய 20 வயதான தேவ்தத் படிக்கல் ஐ.பி.எல்.-ல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக பிரமாதமாக பேட்டிங் செய்து கவனத்தை ஈர்த்தார். 15 ஆட்டத்தில் 5 அரைசதம் உள்பட 473 ரன்கள் குவித்த அவர் இந்த சீசனில் வளரும் வீரருக்கான விருதைச் தட்டிச் சென்றார். ஐ.பி.எல்.-ல் அறிமுக தொடரிலேயே சர்வதேச போட்டியில் ஆடாத ஒரு இந்தியர் திரட்டிய அதிக ரன்கள் இது தான். இவரை ரூ.20 லட்சத்திற்கு தான் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இஷான் கிஷன்(மும்பை): ஜூனியர் உலக கோப்பை போட்டியின் மூலம் ஏற்றம் கண்ட ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான இஷான் கிஷன் மும்பை அணியின் வெற்றிப்பயணத்தில் முக்கிய வீரராக அடையாளம் காணப்பட்டார். 14 ஆட்டத்தில் 4 அரைசதம் உள்பட 516 ரன்கள் சேர்த்த அவர் அதிக சிக்சர் நொறுக்கிய வீரருக்கான (30 சிக்சர்) விருதை பெற்றார். இந்த சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன்கள் குவித்தவரான இவரது ஊதியம் ரூ.6 கோடியே 20 லட்சம் ஆகும்.

ருதுராஜ் கெய்க்வாட்(சென்னை): சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.20 லட்சத்திற்கு வாங்கப்பட்ட மராட்டியத்தை சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட்டை ரெய்னா விலகியதும் 3-வது வரிசையில் களம் இறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவரை சரியாக பயன்படுத்த முடியாமல் போய் விட்டது. இருப்பினும் கடைசி 3 ஆட்டங்களில் 3 அரைசதங்கள் (6 ஆட்டத்தில் 204 ரன்) விளாசி அசத்தினார். பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக கேப்டன் டோனியால் புகழப்பட்ட 23 வயதான ருதுராஜ் அடுத்த ஐ.பி.எல்.-ல் நிச்சயம் சென்னை அணியில் தக்கவைக்கப்படுவார் என்று நம்பலாம்.

இதே போல் ஆல்-ரவுண்டர் ராகுல் திவேதியா (ராஜஸ்தான்), சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் (பஞ்சாப்) ஆகியோரின் செயல்பாடும் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது.

Next Story