சென்னை - திருவண்ணாமலை சிறப்பு ரெயில் சேவை இன்று முதல் இயக்கம்


சென்னை - திருவண்ணாமலை சிறப்பு ரெயில் சேவை இன்று முதல் இயக்கம்
x

கோப்புப்படம் 

சென்னை கடற்கரை - வேலூர் கன்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டு வரும் மெமு ரெயில் இன்று முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது.

சென்னை,

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு தினமும் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மின்சார ரெயில் பாஸ்ட் மின்சார ரெயில் ஆகும். சென்னை கடற்கரையில் மாலை 6 மணிக்கு புறப்படும் ரெயில், வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு இரவு 9.35 மணிக்கு சென்றடைகிறது.

இந்த ரெயில், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. சென்னையில் தினமும் வேலைக்கு சென்று வர இந்த மின்சார ரெயிலை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பாஸ்ட் மின்சார ரெயில் என்பதால் முக்கியமான ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

இந்த நிலையில், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில் சென்னை கடற்கரை - வேலூர் கன்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டு வரும் மெமு ரெயில் (06033/06034) மே 2-ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது.

அதன்படி சென்னை - திருவண்ணாமலை செல்லும் சிறப்பு ரெயில் (06033) சென்னை கடற்கரையில் இருந்து இன்று (02.05.2024) மாலை 6 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணியளவில் திருவண்ணாமலை சென்றடையும். அதே போல திருவண்ணாமலை - சென்னை செல்லும் சிறப்பு ரெயில் (06034) திருவண்ணாமலையில் இருந்து நாளை (03.05.2024) அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story