

மும்பை,
பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா மும்பையில் ரெயிலில் இருந்து குதித்து பலத்த காயமடைந்திருக்கிறார். அவருக்கு முதுகெலும்பு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பற்றி அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், ''படப்பிடிப்புக்காக சர்ச்கேட்டுக்கு ரெயிலில் செல்ல விரும்பினேன். அதற்காக ரெயில் நிலையத்திற்கு சென்று ரெயிலில் ஏறினேன். ரெயில் கிளம்பியது, ஆனால் என் நண்பர்கள் ஏறவில்லை.
அப்போது நான் சேலை அணிந்திருந்தேன். இருப்பினும், தைரியத்தை வரவழைத்து குதித்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக என் தலை மற்றும் முதுகெலும்பில் அடிபட்டது.
தற்போது மிகுந்த வலியுடன் சிகிச்சை பெற்று வருகிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் என்னை மீட்க உதவும். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
கரிஷ்மா சர்மா ''பியார் கா பஞ்சநாமா 2'', ''உஜ்தா சாமன்'', ''ஹோட்டல் மிலன்'' மற்றும் ''ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ்'' போன்ற படங்களில் நடித்துள்ளார். ''ராகினி எம்எம்எஸ்: ரிட்டர்ன்ஸ்'' என்ற வெப் தொடரில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ''பவித்ரா ரிஷ்டா'', ''சில்சிலா பியார் கா'' போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.