பரமத்தி வேலூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கூடாரவல்லி விழா

கூடாரவல்லி விழாவை முன்னிட்டு உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கூடாரவல்லி விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள்.
கூடாரவல்லி விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள்.
Published on

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் காவேரி சாலையில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் மார்கழி மாதம் 27 ஆம் நாளான நேற்று கூடாரவல்லி உற்சவம் மற்றும் ஆண்டாள் பெருமாளிடம் ஐக்கியமான நிகழ்வு நடைபெற்றது.

இதையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதற்காக கோவில் முழுவதும் வர்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள் எழுந்தருளினார். மேள தாளங்கள் முழங்க விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் சீர்வரிசை தட்டுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில் யாக வேள்விகள் நடைபெற்றன. வேள்வியின் முடிவில் பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டது. திருமாங்கல்யத்துக்கு பூஜைகள் நடைபெற்று மாங்கல்யதாரணம் நடைபெற்றது.

முன்னதாக பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மூலவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு சோடச உபசாரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளை தரிசனம் செய்தனர்.

விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com