

சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று திருக்கல்யாண விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் முன்பாக மேடை அமைக்கப்பட்டு, கோவிலில் சுவாமி மற்றும் அம்பாளை எழுந்தருளச் செய்தனர். பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.
இதைத் தொடர்ந்து திருக்கல்யாண விழாவிற்கான யாக பூஜை நடைபெற்றது. பூஜையின் நிறைவில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோவில் செயல் அலுவலர் கார்த்திகைசெல்வி, கோவில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் திருமணக் கோலத்தை தரிசனம் செய்தனர்.
திருமணம் வேண்டி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களது ஜாதகத்தை வைத்து பூஜை செய்து பகவானிடம் வேண்டிக் கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.