தலை முடி வெட்டாததை கண்டித்த பள்ளி செயலாளரை குத்திக்கொன்ற மாணவர்கள்

தப்பியோடிய 2 மாணவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தலை முடி வெட்டாததை கண்டித்த பள்ளி செயலாளரை குத்திக்கொன்ற மாணவர்கள்
Published on

சண்டிகர்,

அரியானா மாநிலம் ஹைசர் மாவட்டம் பாஸ் கிராமத்தில் தனியார் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தின் செயலாளராக ஜக்பீர் சிங் பானு (வயது 55) செயல்பட்டு வந்தார்.

இதனிடையே, பள்ளிக்கூடத்தில் பயின்றுவரும் மாணவர்கள் சரியாக தலை முடி வெட்ட வேண்டும். சீருடையை சரியாக அணியவேண்டும் என்று செயலாளர் ஜக்பீர் சிங் வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், அந்த பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்து வந்த 2 மாணவர்கள் சரியாக முடிவெட்டாததை கண்ட பள்ளி செயலாளர் ஜக்பீர் சிங் பானு நேற்று மதியம் பள்ளி வளாகத்தில் வைத்து மாணவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இருவரும் தாங்கள் பள்ளிக்கு மறைத்து கொண்டுவந்த கத்தியால் ஜக்பீர் பானுவை சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஜக்பீரை மீட்ட ஆசிரியர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தினர்.

ஜக்பீரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய 2 மாணவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com