

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உல்லால் மெயின் ரோட்டில் பிரஸ் லே-அவுட்டில் வசித்து வந்தவர் தர்மசீலன் (வயது 29). இவரது சொந்த ஊர் தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் பின்னலவாடி கிராமம் ஆகும். இவரும் மஞ்சுவும் (28) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மஞ்சுவை தர்மசீலன் 8 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். பின்னர் வீட்டில் இருந்த மின்விசிறியில் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தர்மசீலன் முதலில் துபாயில் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னா அங்கு வேலையை விட்டுவிட்டு பங்களூரு வந்த தர்மசீலன், மனைவியை அழைத்து கொண்டு தமிழ்நாட்டுக்கு சென்றார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் அவர்கள் பெங்களூருவுக்கு வந்திருந்தனர்.
மஞ்சு வேலைக்கு செல்வது தர்மசீலனுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் மது போதையில் வீட்டுக்கு வந்த தர்மசீலன் வேலைக்கு செல்வது குறித்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு முற்றி கத்தியை எடுத்து 8 முறை கொடூரமாக குத்தி மனைவி மஞ்சுவை தர்மசீலன் கொலை செய்துள்ளார்.
பின்னர் அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். பின்னர் மஞ்சுவின் தந்தை பெரியசாமி, தனது மகளை பார்க்க வந்தபோது தான் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.