

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் ஹம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலி (வயது 40). இவரது கணவர் ஷம்வீர். அஞ்சலி அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆஷா பணியாளராக வேலை செய்து வந்தார்.
இதனிடையே, அஞ்சலி நேற்று காலை வேலைக்கு சென்றுள்ளார். ஆனால், மாலை அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான அஞ்சலியை தேடி வந்தனர்.
இந்நிலையில், பாரத் என்ற பகுதியில் கொடனா கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வீட்டின் அருகே பிளாஸ்டிக் பையில் அரைநிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர், விசாரணையில் அந்த பெண் மாயமான அஞ்சலி என்பது தெரியவந்தது. மேலும், அஞ்சலியின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததற்கான அடையாளங்கள் இருந்தன. இதையடுத்து, அஞ்சலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று உடலை ஆள் நடமாட்டமற்ற கட்டிடம் அருகே வீசிச்சென்ற நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை, அஞ்சலியை அவரின் கணவரின் சகோதரனான (மைத்துனர்) பூபேந்திரா துப்பாக்கியால் சுட்டுக்கொன்றிருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுவரை பூபேந்திராவிடம் விசாரணை நடைபெறவில்லை