தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது - சி.பி.ஐ. அதிரடி

சிந்தன் ரகுவன்ஷியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது - சி.பி.ஐ. அதிரடி
Published on

புவனேஸ்வர்,

ஒடிசாவை சேர்ந்த சுரங்க தொழிலதிபர் ரதிகாந்தா ராவத் என்பவருக்கு எதிரான புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த விசாரணையில் இருந்து ரதிகாந்தா ராவத்தை விடுவிக்க ஒடிசாவில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தின் துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷி என்பவர் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ரதிகாந்தா ராவத், அளித்த புகாரின்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, லஞ்சப்பணம் ரூ.2 கோடியில் முதல் தவணை ரூ.50 லட்சத்தை வியாழக்கிழமை மாலைக்குள் இடைத்தரகருக்கு செலுத்த வேண்டும் என்று சிந்தன் ரகுவன்ஷி கூறியதாக ரதிகாந்தா ராவத் தெரிவித்தார்.

இதன்படி இடைத்தரகர் ஒருவரிடம் லஞ்சப்பணத்தை ரதிகாந்தா ராவ் செலுத்தியபோது, சி.பி.ஐ. அதிகாரிகள் அந்த இடைத்தரகரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட விரிவான விசாரணைக்குப் பிறகு, அமலாக்கத்துறை அதிகாரி சிந்தன் ரகுவன்ஷியும் கைது செய்யப்பட்டு சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து சிந்தன் ரகுவன்ஷியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்படவில்லை என்றும், அந்த மனு ஜூன் 4-ந்தேதி விசாரிக்கப்படும் என்றும் கோர்ட்டு தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com