

புதுடெல்லி,
வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான, பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
"சர்வதேச நாணய நிதியத்தின் பிப்ரவரி 2025 அறிக்கையின்படி, 2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தியா 66 சதவீதம் வளர்ச்சியடைந்து, 3.8 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. நாட்டின் வளர்ச்சி பல்வேறு நாடுகளை விட அதிகமாக உள்ளது.
இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தியாவின் கல்விமுறை இன்று மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட் இந்தியாவின் எதிர்காலத்திற்கான ஒரு வரைபடமாக உள்ளது. அதில் உள்கட்டமைப்பு, தொழில்கள், மக்கள், பொருளாதாரம் மற்றும் புதுமை ஆகியவற்றின் மீதான முதலீடுகளுக்கு சமமாக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன.
இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் நடைமுறை திறன்களை வழங்குவதற்காக 'பிரதம மந்திரி பயிற்சித் திட்டம்' தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் அனைத்து அளவிலான வணிக நிறுவனங்களும் பங்கேற்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில், அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 75,000 இடங்களை சேர்க்கும் இலக்குடன், 10,000 கூடுதல் மருத்துவ இடங்களை அறிவித்தோம். சுற்றுலா துறைக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் வரை பங்களிக்கும் திறனை சுற்றுலா துறை கொண்டுள்ளது. மேலும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடியது.
சுற்றுலாவை அடிப்படையாக கொண்டு நாடு முழுவதும் 50 இடங்கள் மேம்படுத்தப்படும். இந்த இடங்களில் உள்ள ஓட்டல்களுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்குவது, சுற்றுலா துறையை மேம்படுத்துவதோடு, உள்ளூர் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும்.
அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப திட்டமிடப்பட்ட நகரமயமாக்கல் என்பது அவசியமாகும். இதில் ரியல் எஸ்டேட் துறை அதிக கவனம் செலுத்த வேண்டும். உள்கட்டமைப்பு துறைக்கு இணையாக திறன் மேம்பாட்டிற்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளித்துள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாக இந்தியா மாறியுள்ளது. ஸ்டார்ட்அப்களை ஊக்குவிப்பதற்காக இந்த பட்ஜெட்டில் பல நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு பல லட்சம் கோடிகளுக்கு பங்களிப்பை வழங்க முடியும். இந்த பட்ஜெட்டில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக ரூ.500 கோடியை ஒதுக்கியுள்ளோம். ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எஸ்.சி.களில் 10,000 ஆராய்ச்சி இடங்களை வழங்குவது ஆராய்ச்சியை வளர்ப்பதோடு, திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும்.
ஞான பாரதம் மிஷன் திட்டத்தின்கீழ், ஒரு கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். இது ஒரு தேசிய டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்க வழிவகுக்கும். இந்த களஞ்சியம் உலகெங்கிலும் உள்ள அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் வரலாற்று, பாரம்பரிய அறிவு மற்றும் ஞானத்தை அணுக உதவும்."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.