

புதுடெல்லி,
பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டியில் 19 வயதான இந்தியாவின் திவ்யா தேஷ்முக், சக நாட்டவரான ஹம்பியை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார். கடந்த ஆண்டு ஆண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தின் குகேஷ் பட்டம் வென்றார். இப்போது இந்தியாவுக்கு மேலும் மணிமகுடமாக திவ்யாவின் வெற்றி அமைந்திருக்கிறது.
19 வயதான திவ்யா, மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர். அவருக்கு ரூ.43 லட்சமும், 2-வது இடத்தை பிடித்த ஆந்திராவைச் சேர்ந்த 38 வயதான ஹம்பிக்கு ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. மேலும் இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியன் சீனாவின் ஜு வென்ஜுனை எதிர்த்து விளையாடும் வீராங்கனையை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார்.
இந்தநிலையில், பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில்,
இந்திய செஸ் விளையாட்டுக்கு இது ஒரு அற்புதமான நாள். திவ்யா தேஷ்முக் 2025 பெண்கள் மகளிர் உலகக்கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், கிராண்ட்மாஸ்டராகவும் மாறியுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனை பலரை ஊக்குவிக்கும் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சதுரங்கம் இன்னும் பிரபலமடைய பங்களிக்கும் என பதிவிட்டுள்ளார்.