பக்தர்கள் வெள்ளத்தில் பிரயாக்ராஜ்: 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வழிபாடு

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க, பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் பிரயாக்ராஜ்: 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வழிபாடு
Published on

பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்களுக்கு இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க, தொடர்ந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இதனிடையே மகா கும்பமேளாவுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவழிப்பதாக ஆளும் பா.ஜனதா அரசு மீது, அந்த மாநில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை தெரிவிக்கிறார்கள். மகா கும்பமேளாவுக்காக மாநில அரசு ரூ.1,500 கோடி மட்டுமே ஒதுக்கியது. ஆனால் இதுவரை மாநில அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

நேற்றைய தினமும் ஏராளமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com