தூக்கத்தில் 10-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த நபர் - ஜன்னல் கம்பியில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்

10-வது மாடியில் இருந்து விழுந்தவர், 8-வது மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் கிரில் கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டார்.
தூக்கத்தில் 10-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த நபர் - ஜன்னல் கம்பியில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்
Published on

காந்திநகர்,

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் வசித்து வருபவர் நிதின் ஆதியா(வயது 57). இவர் 10-வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருக்கும் இடத்தில் படுத்து அப்படியே தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தூங்கிக் கொண்டிருந்த நிதின், அப்படியே உருண்டு கீழே விழுந்துள்ளார். 10-வது மாடியில் இருந்து விழுந்த அவர், 8-வது மாடியில் வெளிப்புறமாக பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் கிரில் கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், நிதின் ஆதியாவை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். பின்னர் முதலுதவி சிகிச்சைக்காக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 10-வது மாடியில் இருந்து விழுந்த நபர், ஜன்னல் கம்பியில் சிக்கி அதிசயமாக உயிர்தப்பிய சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com