இறந்தவர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் நீடிப்பதை அனுமதிக்க முடியாது- தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்

தகுதியற்ற நபர்களை வாக்களிக்க அனுமதிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தேர்தல் ஆணையர் கூறினார் .
இறந்தவர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் நீடிப்பதை அனுமதிக்க முடியாது- தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்
Published on

புதுடெல்லி,

பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. அதில், 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், இந்திய குடிமகன் என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பீகாரில், வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். அதில், இதுவரை 52 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள், அவர்கள் அளித்த முகவரிகளில் இல்லை என்று தெரிய வந்துள்ளது. 18 லட்சம் வாக்காளர்கள், ஏற்கனவே இறந்து விட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி குறித்த சர்ச்சைகளுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

நியாயமான தேர்தலுக்கும், வலிமையான ஜனநாயகத்துக்கும் தூய்மையான வாக்காளர் பட்டியல்தான் அடிப்படை. அதை ஒளிவுமறைவற்ற முறையில் தேர்தல் கமிஷன் தயாரிக்கிறது. இறந்தவர்கள் பெயர்களும், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் பெயர்களும், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்தவர்கள் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் நீடிப்பதை அனுமதிக்க முடியாது. தகுதியற்ற நபர்களை முதலில் பீகாரிலும், பின்னர் நாடு முழுவதற்கும் வாக்களிக்க அனுமதிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com