கணவர், 6 குழந்தைகளை தவிக்க விட்டு, பிச்சைக்காரனுடன் ஓடிப்போன பெண்

மாட்டை விற்று வைத்திருந்த பணத்துடன் தன் மனைவி வீட்டை விட்டு சென்றதாக கணவர் புகார் அளித்தார்.
கணவர், 6 குழந்தைகளை தவிக்க விட்டு, பிச்சைக்காரனுடன் ஓடிப்போன பெண்
Published on

ஹர்டோய்:

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டம் ஹர்பால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு (வயது 45). இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 36). இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 3-ம் தேதி வீட்டை விட்டுச் சென்ற ராஜேஸ்வரி, அதன்பின் வீடு திரும்பவில்லை. தனது மனைவியை பிச்சைக்காரர் ஒருவர் கடத்திச் சென்றிருப்பதாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் கீழ் அவரது கணவர் புகார் அளித்தார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான்ஹே பண்டிட் (வயது 45) என்ற பிச்சைக்காரர் சில சமயம் பக்கத்து வீடுகளில் பிச்சை எடுக்க வருவது வழக்கம். அப்போது என் மனைவி ராஜேஸ்வரிக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

கடந்த 3-ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் என் மனைவி ராஜேஸ்வரி, மார்க்கெட்டுக்கு சென்று துணிகள் மற்றும் காய்கறிகள் வாங்கி வருவதாக மகளிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எருமை மாட்டை விற்று வைத்திருந்த பணத்துடன் என் மனைவி வீட்டை விட்டு சென்றுவிட்டார். அவரை நான்ஹே பண்டிட் அழைத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண்ணை கண்டுபிடித்து மீட்டனர். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அவரை கடத்தி சென்றதாக கூறப்படும் நான்ஹே பண்டிட்டை தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com