

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இன்று இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், தென்காசி பஸ் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இன்று (24.11.2025) காலை சுமார் 11.30 மணி அளவில், தென்காசி - கடையநல்லூருக்கு இடையே துரைச்சாமியாபுரம் பகுதியில் எதிரெதிரே வந்த இரண்டு தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட கோர விபத்தில், ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பலர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, காயமுற்றோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இறந்த குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரண உதவி வழங்கிடவும் வலியுறுத்துகிறேன்.
மதிமுக துணைப்பொதுச் செயலாளர் ராசேந்திரன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ, தென்காசி தெற்கு மாவட்டச் மதிமுக செயலாளர் உதயசூரியன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிமுக சார்பில் இரங்கலும், ஆறுதலும் தெரிவிப்பார்கள்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.