ஈரோட்டில் மாயமான 6 வயது சிறுவன் ஓடையில் சடலமாக மீட்பு

ஓடையின் கரையில் நடந்து சென்றபோது தவறி விழுந்து சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் மாயமான 6 வயது சிறுவன் ஓடையில் சடலமாக மீட்பு
Published on

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த சக்கரவர்த்தி, சாந்தகுமாரி தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும், சஞ்சய் (6 வயது) என்ற ஆண் குழந்தையும் இருந்தது. சஞ்சய் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். சாந்தகுமாரி வேலை காரணமாக வெளியூர் செல்வதாக இருந்தால், குழந்தைகளை அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடியில் விட்டுச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இன்று குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது. சாந்தகுமாரி நாமக்கல் செல்ல வேண்டி இருந்ததால், குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் விட்டுள்ளார். இந்த நிலையில் மதியம் 2 மணியளவில், சிறுநீர் கழிப்பதற்காக அங்கன்வாடியில் இருந்து வெளியே சென்ற சிறுவன் வெகுநேரமாகியும் திரும்பவில்லை.

இதையடுத்து சிறுவன் மாயமானது குறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் மாயமான சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அங்கன்வாடி மையத்துக்கு அருகில் உள்ள பெரும்பள்ளம் ஓடையில் சிறுவன் விழுந்திருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் அங்கும் தேடினர்.

இந்த நிலையில் சிறுவன் சஞ்சயின் உடல் பெரும்பள்ளம் ஓடையில் இருந்து மீட்கப்பட்டது. ஓடையின் கரையில் நடந்து சென்றபோது தவறி விழுந்து சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான 6 வயது சிறுவன் ஓடையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com