கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதலில் செல்வதில் திமுக - தவெக இடையே போட்டி: அண்ணாமலை விமர்சனம்

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.
கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதலில் செல்வதில் திமுக - தவெக இடையே போட்டி: அண்ணாமலை விமர்சனம்
Published on

ஊட்டி,

பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். இதில் பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதில் ஊட்டியில் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. மக்கள் எழுச்சியுடன் இருக்கிறார்கள். தி.மு.க.2021-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட 511 வாக்குறுதிகளில் 50 கூட நிறைவேற்றவில்லை. ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்த தி.மு.க., தற்போது அவர்கள் போராடினால் கைது செய்கிறார்கள்.

சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து அ.தி.மு.க. ஆட்சி முடிவடைந்தது வரை தமிழகத்தின் கடன் ரூ.4 லட்சம் கோடி இருந்தது. ஆனால், தி.மு.க. அரசு 4 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.5 லட்சம் கோடியை கடனாக பெற்றுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 60 சதவீதம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். அதற்கு மோடி ஆசி பெற்ற ஆட்சி அமைந்தால் சாத்தியம்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் மக்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும். சிறுபான்மையினர் ஓட்டு வாங்குவதற்காக கிறிஸ்துமஸ் விழாவுக்கு தி.மு.க. முதலில் செல்வதா, த.வெ.க. முதலில் செல்வதா என போட்டி. ஆனால் பா.ஜனதாவை பார்த்து மதவாத கட்சி என கூறுகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி தேவாலயத்துக்கு சென்று 2 மணி நேரம் ஜெபத்தில் கலந்துகொண்டு, கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நம் மீது அவதூறுகளை வீசினாலும், நாம் ஒன்றுபட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com